பொறாமை வேண்டாம் | Don’t be jealous | read tamil stories

பொறாமை வேண்டாம் | Don’t be jealous | read tamil stories

ஒரு கிராமத்தில் பண்ணையார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் வீட்டில் ஒரு நாயையும், பொதி சுமக்க ஒரு கழுதையை வளர்த்து வந்தார். கழுதையை வேலைக்காரன் ஒருவன் கவனித்து வந்தான். அவன் பண்ணையாரிடம் வேலைக்காரனாக பணியாற்றி வந்தான். 

பண்ணையாருக்கு அவர் வளர்க்கும் நாய் மேல் அதிக அன்பு இருந்தது. ஏனென்றால், அது இரண்டு முறை திருடர்களைப் பிடித்து அவரிடம் ஒப்படைத்துள்ளது. அவர் வெளியே சென்று வீட்டிற்கு வந்தால் தன் வாலை ஆட்டிக்கொண்டே நன்றியை காட்டும். 

அவர் அமர்ந்திருக்கும் போது உரிமையாக சென்று அவர் மடியில் படுத்துக்கொள்ளும். அவர் முகத்தை ஆசையாக நக்கும். பண்ணையார் அதற்கு இறைச்சி துண்டுகளையும் உயர்ந்த ரக உணவுகளையும் கொடுத்து மிகவும் அன்பாக வைத்திருந்தார்.

பண்ணையார் வீட்டில் வளரும் கழுதை பண்ணையார் நாய்க்கு மட்டும் இவ்வளவு சலுகைகளை வழங்குகிறாரே என்று பொறாமைப்பட்டது. பண்ணையார் நாய்க்கு கொடுக்கும் அத்தனை சலுகைகளையும் தான் பெற வேண்டும் என்று நினைத்தது. 

read tamil stories

நாய் போல் தானும் ஒரு நாள் பண்ணையார் மடியில் படுத்து அவர் முகத்தை நக்க வேண்டும் என திட்டம் தீட்டியது. கழுதையின் எண்ணத்தை நாய் புரிந்து கொண்டது. அது கழுதையை பார்த்து, “நண்பா, எனக்கு கிடைக்கும் சலுகைகளை கண்டு நீ பொறாமை படாதே, நான் செய்வதைப் போன்றே நீ செய்தால் பண்ணையார் பொறுத்துக் கொள்ள மாட்டார். உன்னை நன்றாக அடித்து வீட்டை விட்டு துரத்தி விடுவார்” என்று அறிவுரை கூறியது.

கழுதை நாய் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அது நாயை பார்த்து, “நண்பா நடப்பதை நீயே பார். பண்ணையார் என் செயலால் எப்படி மகிழ்ச்சி அடையப்போகிறார் என்பதை பார்” என்று கூறியது.

அதற்கு பிறகு நாய் எதுவும் பேசவில்லை. அன்றைக்கு பண்ணையார் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி அணிந்து கொண்டு வீட்டில் அமர்ந்து புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தார். உடனே கழுதை விரைவாக ஓடி சென்று அவருடைய மடியில் அமர்ந்து கொண்டது. 

தன்னுடைய நாக்கால் அவருடைய முகத்தை நக்கியது. பின்னர் பெரும் குரல் எடுத்து கத்தியது. பண்ணையாருக்கு கடும் கோபம் வந்தது. அருகில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து அந்த கழுதையை நன்கு அடித்து விட்டார். வலி தாங்க முடியாத கழுதை கத்திக்கொண்டே காட்டுக்குள் ஓடியது.

 நீதி : பிறருக்கு கிடைக்கும் சலுகைகளை பார்த்து நாம் பொறாமை படக்கூடாது. அவ்வாறு பொறாமை பட்டால் அது நமக்கு அழிவு தான் உண்டாக்கும்.




Leave a Comment