நரியும் புலியும் | Fox and Tiger | Tamil stories online
ஒரு அடர்ந்த காட்டிற்குள் பல விலங்குகள் வசித்து வந்தன. அங்குள்ள அனைத்து விலங்குகளுக்கும் புலியை கண்டால் மிகவும் பயம். தூரத்தில் புலி வருவதை பார்த்தாலே இவர்கள் அனைவரும் பயந்து ஓடுவார்கள்.ஒருநாள் புலி வந்து கொண்டிருக்கும்போது, மற்ற விலங்குகள் அந்த புலியை பார்த்து பயந்து ஓடுவதை நரி ஒன்று பார்த்துக் கொண்டு இருந்தது.
அந்த நரிக்கு புலியின் மேல் பொறாமை உண்டு, “இந்த விலங்குகள் எல்லாம் புலியை மட்டும் பார்த்து பயப்பட்டு ஓடுகிறார்கள், ஆனால் என்னை பார்த்து யாரும் பயப்படுவதில்லையே” என்று எண்ணி நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தது.
அப்போதுதான் அது முடிவெடுத்தது நானும் புலியைப் போல் மாறினால் என்னையும் பார்த்து எல்லாரும் நிச்சயமாக பயப்படுவார்கள், என்ற எண்ணத்தில் கொல்லனை நோக்கி அந்தப் நரி புறப்பட்டது. கொல்லனிடம் சென்று நரி சொன்னது, “எனக்கு புலியை போல் தோற்றம் வேண்டும் எனவே என் மீது கோடு போடு” என்றது. அந்தக் கொல்லனும் கம்பியை பழுக்க வைத்து அந்த நரியின் மேல் சூடு போட்டான்.
முதல் சூடு போட்டவுடனே அந்த நரி வலியால் கத்த ஆரம்பித்தது. அந்த நரி கொல்லனிடம் சொன்னது, “எனக்கு புலியைப் போல் தோற்றம் வேண்டும் ஆனால் இப்படி வலி இருக்கக்கூடாது வேறு ஏதாவது செய்” என்றது. அதற்கு அந்த கொல்லன், “வலி இல்லாமல் உனக்கு கோடு போட வேண்டுமென்றால் நீ வண்ணம் பூசுபவனிடம் செல் அவனிடம் சென்று உன் மேல் வண்ணம் பூசிக் கொள்” என்றான்.
நரியும் சரி என்று சொல்லிக்கொண்டு வண்ணம் பூசுபவனிடம் சென்றது. அந்த நரி வண்ணம் பூசுபவனிடம் சொன்னது “எனக்கு புலியைப் போல் தோற்றம் வேண்டும் எனவே என் மீது வண்ணம் பூசி கொள் என்றது”. அவனும் சரி என்று சொல்லிக்கொண்டு அந்த நரியின் மேல் வண்ணத்தை பூசினான்.
அந்த நரி பார்ப்பதற்கு புலியைப் போல் தோற்றம் கொண்டிருந்தது. இந்த நரி “இனிமேல் எல்லோரும் நிச்சயமாக என்னை பார்த்து பயப்படுவார்கள்” என்று சிரித்துக்கொண்டே காட்டுக்குள் சென்று ஊளை இட ஆரம்பித்தது. என்னதான் அது புலியை போல் வண்ணம் பூசி இருந்தாலும், அதன் குரல் நரியை போல் தான் இருந்தது.புலியை போல் அதால் சத்தம் இட முடியவில்லை.
இதன் சத்தத்தை கேட்டு மற்ற எல்லா விலங்குகளும் ஓடி வந்தன. மற்ற விலங்குகள் நரியை பார்த்து ஆச்சரியப்பட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் பயங்கரமான மழை ஆரம்பித்தது. அந்த மழையில் நனைந்த நரியின் வேஷம் அனைத்தும் கலைந்து போயின. அந்த நரி மீண்டும் பழைய நிலைமைக்கே வந்தது. இதை பார்த்த மற்ற எல்லா விலங்குகளும் ஏளனமாக சிரித்தனர்.
நீதி: நாம் நாமாக இருப்பதே நல்லது.