உழைத்தால் மட்டும் போதுமா? | Is it enough to work? | Small Stories For Kids In Tamil
நாள் முழுக்க வேலை தேடி அலைந்தார் ஒருவர். மாலையில் மரக்கடை ஒன்றை கண்டார். ஐயா நான் கடின உழைப்பாளி எந்த வேலை கொடுத்தாலும் நன்றாக செய்வேன் என முதலாளியிடம் உறுதி அளித்தார்.
மரம் வெட்டும் வேலை கிடைத்தது. முதல் நாள் அக்கறையுடன் வேலை செய்தார். மற்ற தொழிலாளிகளை விட வேகமாக மரம் வெட்டும் பணியை செய்து முடித்தார். புதியவரின் திறமையை கண்டு அனைவரும் வியந்தனர்.
ஆனால் விதி சதி செய்தது. அடுத்தடுத்த நாட்களில் அவரால் முதல் நாளைப் போல வேகமாக வேலை செய்ய முடியவில்லை. மற்றவர்களின் பரிகாசத்திற்கு ஆளானார். ஒரு வாரம் கடந்த பின்,” என்ன ஆச்சு முதல்நாள் ஆர்வமாக மரம் வெட்டினிர்களே இப்போது ஏன் முடியவில்லை வேகம் குறைந்துவிட்டது” என்று கேட்டார் முதலாளி.
ஏன் என்று தெரியவில்லை முதல் நாளைப் போல் அக்கறையுடன் தான் வேலை செய்கிறேன் என்றார் அவர். “அப்படியானால் கோடாரியை காட்டுங்கள் அதை எப்படி கூர்மை செய்துள்ளீர்கள் என்று பார்க்கட்டும்” என்றார் முதலாளி. கூர்மையா இதுவரை பட்டை தீட்டவே இல்லை என்றார் அவர்.
“முதல்நாளில் பட்டை தீட்டி கொடுத்தேனே அதை வைத்தே வெட்டிக் கொண்டு இருக்கிறீர்களா” என்றார் முதலாளி. அவரும் “ஆமாம்” என்றார். இதுதான் பிரச்சனை பட்டை தீட்டாமல் வெட்டினால் கோடாரி மட்டுபட்டு விடும். கடினமாக உழைத்தும் பலன் கிடைக்காது என்றார் முதலாளி. அதன்பின் கோடாரியை கூர்மை படுத்துவதை தன் முதல் வேலையாக கொண்டார் மரம் வெட்டுபவர்.
நீதி : உழைத்தால் மட்டும் போதுமா வெற்றிபெற புத்திசாலித்தனமும் அவசியம்.