புத்திசாலி சேவல் | Clever Cock | Tamil Story For Kids

புத்திசாலி சேவல் | Clever Cock | tamil story for kids

ஒரு கிராமத்தில் சேவல் ஒன்று மரத்தின் கிளையில் அமர்ந்து இருந்தது. அது காலையில் தன் குரலில் கூவி எல்லாரையும் எழுப்பி விட்டுக் கொண்டிருந்தது.  அப்போது ஒரு நரி மரத்தின் அருகில் வந்து அந்த சேவல் இடம், “ஹலோ, நண்பா எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டது. 

சேவல் குனிந்து கீழே பார்த்தபோது அந்த நரி மரத்தின் அருகில் நின்று கொண்டு இருந்தது. அப்போது அந்த சேவல் நினைத்தது, “நான் இவனிடம் கவனமாக இருக்க வேண்டும் இவன் தந்திரமான நரி என்னுடைய நண்பர்கள் பலரையும் கொன்று சாப்பிட்டுள்ளான். எனவே நான் தான் என்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என்று எண்ணியது. 

சேவல் அந்த நரியை கண்டுகொள்ளாமல் இருந்தது. ஆனால் அந்த நரி சேவலிடம் மீண்டும் பேச முயற்சித்தது. நரி சேவலிடம் சொன்னது, “நான் உனக்கு நல்ல விஷயம் ஒன்றை சொல்ல தான் வந்துள்ளேன். நம் காட்டில் ராஜாவாகிய சிங்கம் ஒரு புது கட்டளை பிறப்பித்துள்ளது”. 

நரி சொன்னதை அந்த சேவல் நம்பவில்லை ஆனாலும் அது என்னவாயிருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. அப்போது சேவல் நரியிடம், “சரி மகராஜா என்ன கட்டளை தான் பிறப்பித்துள்ளார்? ” என்று கேட்டது. அதற்கு நரி சொன்னது, “இந்த காட்டில் உள்ள நாம் அனைவரும் ஒன்றாக நண்பர்களாக பழக வேண்டும். எந்த ஒரு சண்டையும் வேறுபாடு இல்லாமல் நாம் அனைவரும் நண்பர்களாக இருக்க வேண்டும்”. இதுதான் சிங்கராஜாவின் கட்டளை என்றது அந்த நரி. 

அதற்கு சேவல், “அப்படியா இது உண்மையா” என்று கேட்டது. நரியும், “ஆமாம் உண்மைதான்” என்றது. அதுமட்டுமல்ல  சிங்கராஜா இன்று நமக்காக அவருடைய குகை அருகில் உணவு ஏற்பாடு செய்துள்ளார். எனவே நாம் சேர்ந்து சென்று நம் உணவை அருந்திவிட்டு வரலாம்,என்றது நரி. 

அப்போது அங்கே நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது .அந்த சத்தம் கேட்டதும் நரியின்  முகத்தில் ஒரு பயம் தெரிந்தது. அதைப்பார்த்த சேவலுக்கு நரிக்கு நாய்கள் என்றால் பயம் என்று புரிந்தது. நாய்கள் எப்போதும் நரியை பார்த்தால் விரட்டி கொண்டே இருக்கும். அதனால் நரிக்கு நாய் என்றால் பயம். 

tamil story for kids fox

நரி சேவலிடம் சொன்னது, “நண்பா நீ மரத்தின் கிளையில் தானே இருக்கிறாய் அருகில் ஏதாவது நாய் தென்படுகிறதா?” என்று கேட்டது. சேவல் சுத்திமுத்தி பார்த்தது அங்கே எந்த நாயும் இல்லை. ஆனால் நரிக்கு ஒரு பயம் காட்ட வேண்டும் என்று எண்ணிய சேவல், “ஒரு கூட்டமாக நாய்கள் இங்கேதான் ஓடி வந்து கொண்டிருக்கின்றன” என்றது. 

அதைக்கேட்ட நரியோ அப்படியா, “அப்போது நான் இங்கே இனிமேல் இருப்பது சரியில்லை” என்று பயத்தில் ஓட ஆரம்பித்துவிட்டது. நரி மிகவும் வேகமாக பயந்து ரொம்ப தூரம் ஓடி விட்டது. அப்போது சேவல் நரி ஓடுவதைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தது. 

நீதி : அடுத்தவருக்கு தீமை நினைத்தால் அது நமக்கே தீமையாக வந்து முடியும்.




Leave a Comment