பேராசை பெரும் நஷ்டம் | தமிழ் கதைகள் | Greed Is A Great Loss | Tamil Short Stories

பேராசை பெரும் நஷ்டம் | தமிழ் கதைகள் | Greed Is A Great Loss | Tamil Short Stories

ஒரு கிராமத்தில் ஜீவா என்கிற வியாபாரி வாழ்ந்து வந்தார். அவர் சில நாட்களுக்கு பக்கத்து கிராமத்தில் சென்று வியாபாரம் செய்ய ஆசைப்பட்டார். எனவே தன்னுடைய பொருட்களுடன் தராசு ஒன்றை எடுத்து கொண்டு புறப்பட்டார். சில தூரம் சென்ற பிறகு மிகவும் களைப்புற்றார். 

அந்த தராசு மிகவும் கனமாக இருந்தது. அந்த தராசு ஜீவாவின் தாத்தா அவருக்கு பரிசாக கொடுத்தது. எனவே அதை சுமந்து கொண்டு செல்ல முடியாமல் அதை தன்னுடைய நண்பர் சக்தியின் வீட்டில் கொடுத்து செல்ல முடிவெடுத்தார்.

தன்னுடைய நண்பன் சக்தியிடம் சென்று அந்த தராசை கொடுத்த ஜீவா, “நான் பக்கத்து கிராமத்திற்கு செல்ல இருப்பதால் சில நாட்களுக்கு இந்த தராசை உன் கூடவே பத்திரமா வச்சுக்கோ, திரும்பி வந்தவுடனே இந்த தராசை உன் கிட்ட இருந்து நான் வாங்கிக்கிறேன்” என்று ஜீவா சொல்லிட்டு புறப்பட்டார்.

அந்தத் தராசை பார்த்த சக்தி, “இது மிகவும் விலை உயர்ந்த பொருளாக இருக்கும் போலயே, இதை பேசாமல் நம்ம கூடவே வச்சுக்கலாம்” என்று முடிவு செய்தார். சில நாட்களுக்குப் பிறகு ஜீவா, சக்தி வீட்டுக்கு வந்து தன்னுடைய தராசை கேட்டார் ஆனால் சக்தி, “என்ன மன்னிச்சிடு பா உன்னோட தராசை ஒரு எலி தின்று விட்டது அந்த எலிக்கு நாகரிகமே இல்ல” அப்படின்னு சொன்னார்.

அதைக் கேட்ட ஜீவா மிகவும் மனமுடைந்து போனார். அவர் சக்தியிடம், “சரிப்பா பரவாயில்ல நீ உன்னோட பையனை என் கூட வீட்டுக்கு அனுப்பி வைக்கிறியா  நான் ஊருக்கு போயிட்டு வரும்போது சில பரிசு பொருட்கள் வாங்கிட்டு வந்தேன். அதை அவனிடம் கொடுத்து விடுகிறேன்.” என்று சொன்னார். சக்தியும் அதற்கு சம்மதித்து தன் பையனை ஜீவாவுடன் அனுப்பி வைத்தார்.

நெடுநேரமாகியும் சக்தியின் மகன் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. “ஏன் இவ்வளவு தாமதம் ஆகிறது ஒரு பரிசுப் பொருளை வாங்கிக் கொண்டு வர இவ்வளவு நேரமா” என்று எண்ணிய சக்தி, ஜீவா வீட்டிற்கே சென்று பார்க்கலாம் என்று புறப்பட்டார். அவர் ஜீவாவிடம் சென்று, “ஜீவா என்னுடைய பையன் எங்கே” என்று கேட்டார். 

அதற்கு ஜீவா சொன்னார் “என்னை மன்னித்து விடு சக்தி உன்னுடைய பையனை ஒரு பருந்து தூக்கிக் கொண்டு போனது” என்றார். “என்ன, என்னுடைய பையனை ஒரு சின்ன பருந்து எப்படி தூக்கிக் கொண்டு செல்ல இயலும்” என்று சக்தி மிகவும் கோபப்பட்டார். ஜீவா மற்றும் சக்தி இடையே பெரும் சண்டை ஏற்பட்டது.

அவர்களுடைய சண்டை ஊர் பஞ்சாயத்துக்கு முன்பு வந்தது. அப்போது ஊர் பஞ்சாயத்து தலைவர், “என்ன ஆச்சு?” என்று கேட்டார். அதற்கு சக்தி, ஜீவா, தன்னுடைய பையனை அழைத்து விட்டு பருந்து தூக்கிக் கொண்டு சென்றதாகக் கூறுகிறார். “ஒரு பத்து வயசு பையன எப்படி ஒரு சின்ன பருந்து தூக்கிட்டு போக முடியும்?” என்று சக்தி கேட்டார். 

அதற்கு ஜீவா, “என்னுடைய இரும்பு தராசை எலி தின்றதாக சக்தி சொல்கிறார். ஒரு இரும்பு தராசை எலி சாப்பிடும் போது, ஒரு பையன பருந்து தூக்கிட்டு போக முடியாதா” என்று கேட்டார். 

அதற்கு ஊர்த்தலைவர் நீங்க ரெண்டு பேரும் சின்ன குழந்தை தனமா சண்டை போட்டுட்டு இருக்கீங்க என்று சொன்னார். ஊர் தலைவர் சக்தியிடம், “ஜீவாவுடைய தராசு எங்கே இருக்கு” என்று கேட்டார். அதற்கு சக்தி, “எனக்கு சரியா தெரியல, நான் வீட்ல ஒரு வாட்டி கூட தேடி பார்கிறேன்” என்று சொன்னான். 

 ஜீவாவிடம் பையன் எங்கே என்று கேட்டபோது, அவன் சொன்னான், “என்னுடைய தராசு என் கையில் வந்ததும் சக்தியுடைய பையன அவரிடம் திருப்பி ஒப்படைக்கிறேன்” என்றார். வீட்டிற்கு சென்ற சக்தி ஜீவாவுடைய தராசை எடுத்து அவரிடமே திருப்பி கொடுத்தார். ஜீவாவும்  பையனை சக்தியிடம்  ஒப்படைத்தார்.

நீதி : பேராசை பெரும் நஷ்டம்.



Leave a Comment