23. முரட்டு மல்லனைச் சொல்லால் வென்றது! | தமிழ் கதைகள் | The rogue wrestler won by word of mouth! | tenali Raman story

23. முரட்டு மல்லனைச் சொல்லால் வென்றது! | தமிழ் கதைகள் | The rogue wrestler won by word of mouth! | tenali Raman story

ஒரு சமயம் இராயரின் அரசவைக்கு டில்லியில் இருந்து அதிசூரன் என்னும் மல்லன் ஒருவன் வந்து, “என்னை வெல்லக்கூடிய மல்லன் உம் நாட்டில் இருந்தால் அனுப்பவும்!” என்று சவால் கூறினான். 

அந்த முரடனைக் கண்ட ஆஸ்தான மல்லர்கள் நடுநடுங்கி மௌனமாய் இருந்தார்கள். உடனே தென்னகத்தின் தன்மானத்தைக் காக்கத் தெனாலி ராமன் எழுந்து நின்று அந்தச் சவாலை  ஏற்றுக்கொண்டான். 

மறுநாள் மல்யுத்த மேடைக்குத் தெனாலிராமன் வந்ததும் அதிசூரன், “என்னோடு இந்த நோஞ்சானா மல்யுத்தம் செய்து வெல்லப் போகிறான்?” என்று ஏளனம் செய்தான். அதற்கு ராமன், “மல்லனே! நீ மல்யுத்தம் செய்வது வெறும் முரட்டுத் தனமாகவா? அல்லது மல்யுத்த சாஸ்திரப்படி? மல்யுத்த சாஸ்திரம் படித்திருந்தால் நோஞ்சான்கூட வெகு சுலபமாக எந்த முரடனையும் ஜெயித்து விட முடியும்!” என்றான்.

மல்யுத்த சாஸ்திரம் என்று ஒன்று இல்லாமல் இருந்தும் அதைத் தானும் படித்திருப்பதாக மல்லன் கூறவே தெனாலிராமன், “அப்படியானால் சரி நான் மல்யுத்த முறையில் சில கைவரிசைகளைக் காண்பிக்கிறேன்! அவற்றிற்குச் சாஸ்திரப்படி என்னென்ன பொருளென்று முதலில் கூறு! பிறகு நீ யுத்தம் செய்யலாம்!” என்றான். 

tenali Raman
tenali Rama

“சரி!” என்று வேறு வழியில்லாமல் சம்மதித்தான் அதிசூரன். உடனே தெனாலி ராமன் குதித்தெழுந்து ஆத்திரத்துடன் அதிசூரனின் கைவிரல்களை மடித்து முஷ்டியாக்கி தன் மார்பில் குத்தி, பிறகு இரண்டு கைகளையும் தோள்வரை தூக்கி விரித்துக் காண்பித்து விட்டு பிறகு இடது கையின் ஆள் காட்டி விரலால் கழுத்தைச் சுற்றியவாறு செய்து, வலது கையால் இடுப்பு உயரத்தில் கவிழ்த்துக் காண்பித்து விட்டு அவனுடைய ஒரு கையை ஆட்டியும் காண்பித்து, “இதற்கு என்ன பதில்?” என்று கேட்டான். 

அதற்குத் திருதிருவென விழித்த அதிசூரன் மறுநாள் வந்து சொல்வதாகச் கூறிச் சென்று இரகசியமாக டில்லிக்குத் திரும்பி ஓடிவிட்டான். அதையறிந்து வியந்த இராயர் தெனாலி ராமனை நோக்கி, “இராமா! மல்யுத்த சாஸ்திரப்படி நீ செய்து காட்டிய கைவரிசைகளின் பொருள் என்ன?” என்று வினவினார்.

அதற்கு ராமன், “அரசே! அது ஒன்றும் மிகவும் பிரமாதமானதல்ல! நான் உன்னிடம் மல்யுத்தம் செய்தால் நீ என்னைக் குத்திக் கொன்று விடுவாய்! நான் இரு கைகளையும் விரித்துக் கொண்டு கழுத்து முறிபட்டு மல்லாந்து விழுவேன். அப்படி நான் இறந்து விட்டால் என் மனைவி மக்களை யார் காப்பாற்றுவது? என்றுதான் அதற்குப் பொருளாகும். 

அவனோ திகைத்து ஓடிவிட்டான். டில்லியிலிருந்து வந்த மிருக சக்தியை தென்னகத்தின் புத்திசாதுரியம் வென்று விட்டது!” என்று சொல்லிச் சிரித்தான். சபையும் சிரித்து மகிழ்ந்தது.



Leave a Comment