பாட முயன்ற கழுதை | நீதிக் கதைகள் | Tamil story

ஒரு காலத்தில் ஒரு காட்டில் முரட்டுக் கழுதை ஒன்று வசித்து வந்தது. அதற்கு நண்பர்கள் இல்லாததால் அது தனியே அலைந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அந்த வழியே ஒரு நரி வந்தது. 

கழுதையைக் கண்டவுடன் அதன் அருகே சென்று, “என்ன செய்தி ? ஏன் கவலையாய் இருக்கிறாய், தோழனே ?” என்று கேட்டது.

“எனக்கு நண்பர்களே கிடையாது. நான் தனியாக வாழ்ந்து வருகிறேன், ” என்று வருத்தத்தோடு கழுதை பதிலளித்தது. 

” நல்லது, கவலைப்படாதே. இன்றிலிருந்து நான் உனக்கு நண்பனாக இருப்பேன், ” என்று கழுதைக்கு ஆறுதல் கூறியது நரி. அன்றிலிருந்து கழுதையும் நரியும் நல்ல நண்பர்களானார்கள். எப்போதும் ஒன்றாகவே காணப்பட்டனர்.

ஒரு பின்மாலைப் பொழுதில், நிலா வெளிச்சத்தில் அந்த இரு நண்பர்களும் காட்டின் ஊடே நடந்து சென்றனர். அந்த நேரம் குளுமையாகவும் இனிமையாகவும் இருந்தது. நடந்து, நடந்து காட்டின் எல்லையை அடைந்தனர்.

அங்கு, ஒரு கிராமப் பகுதி காணப்பட்டது. மரங்கள் நிறைந்த ஒரு தோட்டம் தென்பட்டது. அதில் பழங்கள் கொத்துக் கொத்தாகப் பழுத்துத் தொங்கிக் கொண்டிருந்தன. 

ஆகா! அருமையான ருசியுள்ள பழங்கள் அவை! அவற்றில் சிலவற்றை நாம் சாப்பிடலாமா ? ” என்று கழுதை கேட்டது. 

 “சரி, நாம் பழங்களைச் சாப்பிடலாம் ஆனால், நாம் சிறிதும் சத்தம் செய்யாமல் இந்த வேலையைச் செய்ய வேண்டும்,” என்று எச்சரித்தது நரி. அவை தோட்டத்திற்குள் சென்றன; சிறிதும் சத்தம் செய்யாமல் பழங்களை உண்ணத் தொடங்கின.

இரண்டும் தேவையான அளவு திருப்தியாக உண்டதற்குப் பிறகு, மிகுந்த மகிழ்ச்சியோடு ஒரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தன.

“மிகவும் சுவையான பழங்களை உண்டு மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால், இந்த இனிமையான சூழலில் இப்போது ஒரே ஒரு குறைதான் உள்ளது என்றது கழுதை.

“அது என்ன ?” என்று நரி கேட்டது. “இசை இல்லாததுதான் குறையாக உள்ளது. ஏன், அதை நீ உணரவில்லையா ? ” என்று சற்று வியப்புடன் கேட்டது கழுதை.

“நமக்கு எங்கிருந்து இசை கிடைக்கப் போகிறது ?,” என்று கேட்ட நரிக்கு, “நான் ஒரு சிறந்த பாடகன் என்று உனக்குத் தெரியாதா ?” என்று கழுதை கேட்டது. 

இதைக் கேட்ட நரி மிகவும் கவலை அடைந்தது. “மறந்து விடாதே, நண்பா ! நாம் இப்போது ஒரு தோட்டத்தில் இருக்கிறோம்.தோட்டக்காரன் நம் குரலைக் கேட்டால் நமக்குப் பிரச்சினை ஏற்படும். பாட வேண்டும் என்று நீ விரும்பினால் நாம் இங்கிருந்து வெளியேறி விடலாம்,” என்று நரி கழுதைக்கு அறிவுரை கூறியது. 

“நான் நன்றாகப் பாடமாட்டேன் என்று நீ நினைக்கிறாய் அல்லவா ?” என்று வருத்தத்தோடு கூறிய கழுதை, “பொறு, என் இனிமையான குரலை இப்போது கேள் !” என்றது.

தன்னுடைய நல்ல அறிவுரையை அந்தக் கழுதை ஏற்க மறுப்பதை நரி உணர்ந்து கொண்டது. அங்கிருந்து நகர்ந்த நரி, அடர்த்தியான மரங்களுக்குப் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டது.

கழுதை, தலையை உயர்த்தி, அண்ணாந்து பார்த்தவாறு பெரிய குரலில் கத்தத் தொடங்கியது. இந்தச் சத்தத்தைக் கேட்டுத் தோட்டக்காரனும் மற்ற விவசாயிகளும் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். கழிகளால் அக்கழுதையை நையப் புடைத்தனர்.

உடல் முழுவதும் காயம் அடைந்த கழுதை வலியால் துடித்தது. அங்கிருந்து அந்த ஆள்கள் சென்ற பிறகு நரி நண்பனை நெருங்கியது. 

“பாடியதற்கு இது தான் உனக்குக் கிடைத்த பரிசா ?” என்று கழுதையைக் கேட்டது. “அவர்களுக்கு நல்ல இசையை ரசிக்கத் தெரியவில்லை,” என்று சற்று அவமானத்தோடு கூறியது கழுதை.

“உண்மையான நண்பனின் நல்ல அறிவுரையைக் கேட்காவிட்டால் இப்படித்தான் நடக்கும். இன்று நீ ஒரு சிறந்த பாடத்தைக் கற்றுக் கொண்டாயல்லவா ? ” என்று நண்பனான கழுதையிடம் நரி கேட்டது. 

நீதி : நல்லதை கேட்டால் நன்மை; மறுத்தால் தீமை.

Leave a Comment