சிறு துரும்பும் பல்குத்த உதவும் | பழமொழிக் கதைகள் | Tamil story

பஞ்சத்திலே பணக்காரன் ஆனவன் பரட்டை சுந்தரம். அவனுக்கு ‘அப்பு’ என்னும் ஒரு அப்பாவி வேலைக்காரன் இருந்தான். அப்பு எது செய்தாலும் மட்டிப் பயலே, மடப்பயலே, காரியம் உருப்படியா செய்றதில்லே…. என்று குறை சொல்லியே வந்தான்’ பரட்டை.

“முதலாளி! சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்பது போல, என்றைக்கேனும் ஒருநாள் இந்த மட்டி- மடையன் உதவுவான் பாருங்கள்” என்றான் மட்டி. 

அதையும் பார்ப்போம்டா என்று சொல்லியிருந்தான் பரட்டை. 

ஒருநாள்… மதுரையிலிருந்து ‘மாணிக்கம்’ எனும் ஒரு ரவுடி பரட்டையை தேடிவந்தான்.

வாசலில் நின்றிருந்த அப்புவிடம் “பரட்டையிருக்கிறாரா?” என்று அதட்டிக் கேட்டான். 

“நீங்கள் யார் ?” என்று அப்பு கேட்டான். 

” நான் யார் என்பது உன்னிடத்திலே சொல்ல வேண்டிய அவசியமில்லை, பரட்டையிருக்காரா ? இல்லையா ? ” 

மாணிக்கம் வந்த வேகமும் அவன் ஆவேசமாகக் கேட்ட விதமும் அப்புவுக்கு சந்தேகத்தை தோற்றுவித்தது. இவனால் நம்ம முதலாளிக்கு ஆபத்து வந்தாலும் வரலாம் என்று யூகித்தவனாய் “முதலாளி எஸ்.பி.யுடன் முக்கிய விஷயமாகப் பேசிக் கிட்டிருக்காரு. ஐந்து நிமிடம் இப்படி உட்காருங்கள் பேசி முடித்தவுடன் நீங்க வந்திருக்கும் விஷயத்தை சொல்லுகிறேன்” என்று சொல்லிவிட்டு அப்பு பங்களாவிற்குள் சென்றான்.

 எஸ்.பி.யிடம் முக்கிய விஷயமாகப் பேசும் அளவிற்கு பரட்டை இருக்கிறார் என்றால், செல்வாக்கு உள்ளவராகத்தான் இருப்பார். இவரை நான் அடித்தால் சிக்கலில் மாட்டிக் கொள்வேன். என்று நினைத்த மாணிக்கம் சொல்லாம கொல்லாம அங்கிருந்து வெளியேறினான்.

ஐந்து நிமிடம் கழித்து அப்பு வாசலை எட்டிப் பார்த்தான். வந்த ஆளில்லை. அந்த நேரத்தில் பரட்டைக்கு செல்போனும், லேண்ட்லைன் போனும் அலறத் தொடங்கின. 

“ஹலோ.. யாரு வேலைக்காரன் அப்புவா? உங்க முதலாளியை நாங்க அனுப்பின மாணிக்கம் அடித்து நொறுக்கியிருப்பானே?”

“அடித்து ஒண்ணும் நொறுக்கலே. வந்த ஆள் தான் ஓடிப் போயிட்டான்.” 

“டேய் … அப்பு ! நீ என்னடா சொல்றே ?” 

“எங்க முதலாளிக்கு ஒண்ணும் ஆகலே. இதோ அவர் கிட்டேயே கொடுக்கிறேன் பேசுங்க” என்று ரிசிவரை பரட்டைகிட்ட கொடுத்தான். 

“ஹலோ…. ஹலோ….”

எதிர் முனையிலிருந்து பதில் வராததைக் கண்ட பரட்டை”டேய் ! போனிலே யாருடா பேசினது ? ஏன் நான் பேசும் போது ‘ கட் ‘ பண்ணிட்டாங்க ?”

“அது வேறொண்ணும் இல்லே முதலாளி, உங்களை அடிக்க ஆளை அனுப்பியிருக்காங்க. 

“யாருடா ?” 

“யாருன்னு தெரியலே.”

“அந்த ஆள் எங்கேடா ?”

“அந்த ஆளை நான் தான் அனுப்பிட்டேன்.”

“எப்படிடா ? “

“வந்த ஆள்கிட்ட, நீங்க எஸ்.பியோட பேசிக்கிட்டிருக்கிறதா பொய் சொன்னேன். அப்புறம் உங்களை கூப்பிடப் போறது மாதிரி வீட்டுக்குள்ளே நுழைஞ்சு, அஞ்சு நிமிசம் கழிச்சுப் பார்த்தேன். பிறகு… வந்த ஆள் தடம் தெரியாம போயிட்டான், அப்புறம் போன்வந்தது.”

 “யார் பேசினாங்க ?”

“உங்க பார்ட்டனராயிருந்து பிரிஞ்சவங்கல்லாம்.”

“என்ன பேசினாங்க ?” 

“நாங்க அனுப்பி வச்ச ஆளு உங்க முதலாளியை போட்டு தள்ளியிருப்பாங்களே! ன்னு கேட்டாங்க.”

“நீ என்ன சொன்னே ?”

“அப்படிங்களா ! இதோ அவர் கிட்ட பேசுங்கன்னு உங்ககிட்ட போனை கொடுத்தேன்” என்று விலாவாரியாக அப்பு சொன்னான்.

 ” நல்லவேளை, பொய் சொல்லி வந்த ஆளை அனுப்பி எதிரிகளிடத்திலிருந்து என்னைக் காப்பாற்றி விட்டாய். ‘சிறு துரும்பும் பல்குத்த உதவும்’ என்பது போல…. என்றைக்கேனும் இந்த மட்டி… மடையன் உதவுவான் என்று சொன்னதனை நிரூபித்து விட்டாய்.

 சமயோசித புத்தி கொண்ட உன்னை இனிமேல் மட்டி – மடையன்னு சொல்லி திட்ட மாட்டேன்” என்று அன்புடன் கூறிய பரட்டை’ அப்பு’வை கட்டிச் சேர்த்துப் பிடித்து தழுவி, தனது ஆதரவினை தெரிவித்தான்.

Leave a Comment