அறிவற்ற சிங்கம் | நீதிக் கதைகள் | tamil short story

ஒரு காட்டில் ஒரு சிங்கம் வசித்தது. அது வயதான கிழச்சிங்கம். இப்போதெல்லாம் அந்தச் சிங்கத்தால் வேகமாக ஓட முடிவதில்லை. நாள்கள் செல்லச் செல்ல ஓடியாடி வேட்டையாடுவது கடினமான செயலாயிற்று. 

ஒரு நாள் இரைதேடி காட்டில் இங்கு மங்கும் சுற்றி அலைந்து கொண்டிருந்த சிங்கம் ஒரு குகையைக் கண்டது. ஏதாவது விலங்கு இங்குத் தங்கியிருக்கக் கூடும், என்று எண்ணியவாறு, மெதுவாக அதனுள் நுழைந்தது.

உள்ளே ஒரு பிராணியும் இல்லை. நான் உள்ளே ஒளிந்து கொண்டு விலங்கு வருவதற்காகக் காத்திருப்பேன் என்று நினைத்தது. அந்தக் குகை ஒரு நரியின் இருப்பிடம். ஒவ்வொரு நாளும் நரி உணவு தேட வெளியே சென்று மாலையில் குகைக்கு வந்து இளைப்பாறும்.

அன்று மாலை உணவு உண்டப் பிறகு தான் வசிக்கும் இடம் நோக்கி நரி செல்ல ஆரம்பித்தது. அருகில் வந்த போது சூழ்நிலையில் ஏதோ மாற்றம் இருப்பதைக் கண்டது. அங்கு எல்லாமே அமைதியாக இருந்தது. 

“ஏதோ தவறு நடந்திருக்கிறது. ஏன் எல்லாப் பறவைகளும், பூச்சிகளும் சிறிது கூட ஓசை எழுப்பாமல் அமைதியாக இருக்கின்றன ?” என்று தனக்குள் கேட்டுக்கொண்டது நரி.

மிகுந்த கவனத்தோடு மெதுவாகக் குகையை நெருங்கியது. ஆபத்துக்கான அடையாளம் ஏதேனும் இருக்கிறதா என்று அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தது. 

குகையின் வாயிலை நெருங்கிய போது ஆபத்து காத்திருப்பதை அதன் உள்ளுணர்வு எச்சரித்தது. “எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திய பிறகே நான் உள்ளே நுழைய வேண்டும்” என்று கூறியவாறே, நரி யோசித்து ஒரு திட்டம் தீட்டியது.

“அதன்படி, அந்தப் புத்திசாலி நரி தன் குகையைக் கூப்பிட்டது !என் அருமை நண்பனான குகையே ! இன்றைக்கு உனக்கு என்ன நேர்ந்தது ? ஏன் மிகவும் அமைதியாக இருக்கிறாய் ?” என்று கேட்டது நரி.

நரியின் குரல் குகையின் உள்ளே எதிரொலித்தது. பசியை இதற்கு மேலும் தாங்க முடியாத சிங்கம் தனக்குள், நான் உள்ளே இருப்பதால்தான் இந்தக் குகை அமைதியாக இருக்கிறது. நான் உள்ளே இருப்பதை நரி தெரிந்து கொள்வதற்கு முன்னால் நான் ஏதாவது செய்தாக வேண்டுமே, என்று எண்ணியது.

மறுபடியும் நரி தொடர்ந்து பேசியது. “குகையே ! நம்முடைய உடன்படிக்கையை நீ மறந்து விட்டாயா ? நான் வீடு திரும்பும் போது நீ என்னை வரவேற்க வேண்டுமே ? ” என்று சாமர்த்தியமாக ஒரு கேள்வியை எழுப்பியது நரி.

“நண்பனே உள்ளே வா” என்று தன் குரலை மிகவும் தாழ்த்திக் கொண்டு குகையின் உள்ளிருந்து சிங்கம் கூப்பிட்டது. 

வெளியே சிங்கத்தின் குரலைக் கேட்டதும் பறவைகள் கத்தியவாறு அங்கிருந்து பறந்து சென்றன. நரியின் உடல் அச்சத்தால் நடுங்கியது. பசியால் துடித்த சிங்கம் தன் மீது பாய்ந்து கொன்று தின்பதற்கு முன்னால் தன் உயிரைக் காப்பற்றிக் கொள்ள நரி அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.

குகைக்குள் நரி நுழையும் என்று சிங்கம் காத்திருந்தது. நீண்ட நேரம் கழிந்த பின்னரும் நரி வரவேயில்லை. தான் முட்டாளாக்கப்பட்டதைப் பிறகு சிங்கம் உணர்ந்து கொண்டது. தன்னுடைய முட்டாள்தனத்தால் இரையைத் தப்பிக்க விட்டதை அறிந்து சிங்கம் தன்னையே நொந்து கொண்டது.

 நீதி : புத்தி இல்லாதவனுக்கு எல்லாமே சிக்கல்தான்.

Leave a Comment