பனி தேவதை – அறிவுக் கதைகள் – Tamil kathaigal

யாருமே இல்லாத பனிப்பிரதேசம் ஒன்றில் ஒரு விறகு வெட்டி தனியாக வாழ்ந்து கொண்டிருந்தான். அவன் கடுமையான உழைப்பாளி. பனியின் ஊடாக தனது சறுக்கு வண்டியில் பயணம் செய்து அங்கிருந்த மரங்களை வெட்டி நாற்பது மைல் தொலைவில் உள்ள ஒரு சந்தைக்கு சுமையாகக் கொண்டு சென்று விற்று வருவான். 

அவனுக்கு துணைக்கு யாருமே கிடையாது. அவனுக்கு இருந்த ஒரே பிரச்சனை பசி. எப்போதும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் அவனுக்காக சமைத்து தருவதற்கு ஆள் யாருமில்லை. தேவையான உணவை வாங்கிக் கொள்ளும் அளவு அவனிடம் பணமும் இல்லை.

ஆகவே இருப்பதைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு வந்தான். எப்போதாவது பசி அதிகமாக இருந்தால் கடவுளே ஏன் இப்படி என்னை சோதிக்கிறாய் என்று புலம்பியபடியே பிரார்த்தனை செய்வான். 

ஒருநாள் அப்படி புலம்பிக் கொண்டிருக்கும் போது விறகுவெட்டி மீது கருணை கொண்ட பனி தேவதை வானத்திலிருந்து தன் சிறகை விரித்துப் பறந்து அவன் முன்னால் தோன்றினாள்.

அவன் ‘நீ யார்’ என்று கேட்டான் ‘. 

‘ நான் தான் பனிதேவதை என்றது’. 

அதை நான் எப்படி நம்புவது என்று கேட்டான், உனக்கு என்ன தேவை என்றாலும் கேளு அதை உடனே தருகிறேன், அப்போதாவது நீ நம்புவாயா’ என்று கேட்டது தேவதை. 

அவனுக்கு என்ன கேட்பது என்று புரியவில்லை. 

‘ தேவதை உன் வாழ்க்கைக்குத் தேவையான எதை வேண்டுமானாலும் கேள் , தருகிறேன்’ என்றது. 

உடனே அந்த மனிதன்’ தனக்கு ஒரு பெரிய சாக்லெட் கேக் வேண்டும்’ என்று கேட்டான். 

தேவதை சிரித்துக் கொண்டே இது தான் உன் ஆசையா என்றது. 

அவன்’ ஆமாம் சாக்லெட் கேக் சாப்பிட வேண்டும் என்று பலகாலமாக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன், பெரிய கேக்காக கொடு என்றான்.

அய்யோ இவ்வளவு அப்பாவியாக இருக்கிறானே என்று நினைத்து கொண்டு தேவதை’ விறகுவெட்டியே இது சாதாரண ஆசை இதைவிடப் பெரியதாக வேறு எதாவது கேள்’ என்றாள்.

உடனே அவன்’ நீ தேவதை என்று நம்புவதற்கு இதுவே போதும்’ என்றான். உடனே அந்த தேவதை உன் ஆசைப்படியே ஒரு சாக்லெட் கேக் அல்ல நூறு சுவையுள்ள கேக்குகள் இப்போது வரும் பார் என்று கையை உயர்த்தினாள். 

மறு நிமிசம் சிறியதும் பெரியதுமாக பல்வேறு சுவையுள்ள கேக்குகள் அங்கே தோன்றின. 

விறகுவெட்டியால் அதை நம்பவே முடியவில்லை.   இவ்வளவும் எனக்குத் தானா, என்று கேட்டான்.     ஆமாம் வேண்டிய மட்டும் சாப்பிடு என்றாள் ‘தேவதை. 

அவன் அவசர அவசரமாக கேக்குகளை பிய்த்து சாப்பிட்டான். பிறகு சிரிப்போடு’ நீ தேவதையே தான் எதற்காக என்னைத் தேடி வந்திருக்கிறாய் ஏதாவது உதவி வேண்டுமா’ என்று கேட்டான்.        தேவதை சிரித்தபடியே’ நான் உனக்கு உதவி செய்ய வந்திருக்கிறேன்’ நீ மிகவும் நல்ல மனிதனாக இருக்கிறாய். 

 வேறு ஏதாவது ஒரு வரம் கேள் தருகிறேன். அதை வைத்து உன் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று சொன்னாள்.   

விறகு வெட்டி யோசித்து யோசித்துப் பார்த்தான். 

என்ன கேட்பது என்றே புரியவில்லை. 

அவனுக்கு ஆரஞ்சுபழச் சாறு குடிக்க ரொம்பவும் பிடிக்கும் என்பதால் அதையே கேட்கலாம் என்று நினைத்து நூறு பாட்டில் ஆரஞ்சு பழச் சாறு வேண்டும் என்று கேட்டான். 

தேவதை சிரித்தபடியே ‘சாப்பாட்டைத் தவிர வேறு ஆசைகளே உனக்கு கிடையாதா. நான் உன் முன்னேற்றத்தில் ஆசைப்பட்டு வரம் தர முன்வந்திருக்கிறேன். உன் வசதியைப் பெருக்கிக் கொள்ள ஏதாவது கேள்’ என்றாள். 

விறகு வெட்டி குழப்பமடைந்து போனான். தனக்கு என்ன வசதி வேண்டும் என்று கூட அவனுக்குத் தெரியவில்லை, கொஞ்ச நேரம் யோசித்து விட்டு நீ சொல்வது புரிகிறது என் வீட்டிற்கு கதவுகளே கிடையாது. அதனால் குளிர்காலத்தில் நன்றாக உறங்க முடியவில்லை, நல்ல கதவும் உறங்குவதற்கு நல்ல படுக்கையும் கொடு, அதுவே போதும் என்றான்.

அய்யோ இந்த விறகு வெட்டி பிழைக்கத் தெரியாதவனாக இருக்கிறானே என்று வருந்திய தேவதை’ இது போதுமா’ என்று கேட்டது. 

‘இது மட்டும் இருந்தால் கதவை மூடிக் கொண்டு நிம்மதியாகத் தூங்குவேன்’ என்றான்.

அவள் சிரித்தபடியே உன் ஆசைப்படியே கதவும் படுக்கையும் தருகிறேன் என்று வானை நோக்கி கைகளை உயர்த்தினாள். 

 மறுநிமிசம் அழகான கதவும் மிருதுவான படுக்கையும் தலையணையும் கம்பளியும் அங்கே இருந்தது. 

விறகுவெட்டி படுக்கையில் புரண்ட படியே சுகமாக இருக்கிறது என்று பாடினான். 

அப்போதும் அந்த தேவதைக்கு விறகுவெட்டிக்குத் தேவையான உதவியைத் தான் செய்யவில்லை என்ற ஆதங்கமே இருந்தது.    ‘உனக்காக மூன்றாவது வரம் ஒன்றும் தர இருக்கிறேன் இதையாவது உருப்படியாக கேள்’ என்று சொன்னது. 

விறகுவெட்டி நீண்ட நேரம் யோசித்தான். 

பிறகு அவளிடம் எனக்கு என்ன தேவை என்று புரிந்துவிட்டது. 

‘எனது துணிகளை துவைப்பதற்கும் எனக்காக சமைப்பதற்கும் இங்கே ஆளே கிடையாது. ஆகவே நீ ஏன் எனது வேலைக்காரியாக இருக்க கூடாது என்று கேட்டான். 

அய்யய்யோ வரம் கொடுக்க வந்த நம்மையே வேலைக்காரியாக சொல்கிறானே என்று தேவதை பயந்து போய்விட்டது. 

உடனே விறகுவெட்டி ‘நான் கேட்டதை உன்னால் தரமுடியுமா முடியாதா’ என்று கேட்டான்.       

வேறுவழியில்லாமல் அந்த தேவதை விறகுவெட்டியின் வீட்டில் வேலைக்காரியாக மாற வேண்டிய சூழ்நிலை எற்பட்டது.    

அன்றிலிருந்து அந்த விறகுவெட்டி படும் எல்லா கஷ்டங்களையும் தேவதையும் சேர்ந்து அனுபவிக்க நேர்ந்தது. 

நமக்கு என்ன வேண்டும் என்றே தெரிந்து கொள்ளாவிட்டால் தேவதையே வந்து வரம் தந்தாலும் நம்மால் முன்னேற முடியாது. அது போல முட்டாள்களுக்கு தேவதைகளே உதவி செய்ய வந்தாலும் அவர்கள் தானும் கெட்டதோடு தேவதைகளையும் வேலைக்காரியாக்கிவிடுவார்கள். 

 இது ஒரு ஜெர்மானியச் சிறுவர் கதை. 

தேவதைகள் உண்மையில் இருக்கிறார்களோ இல்லையோ உதவி செய்ய வருகின்ற யாராக இருந்தாலும் அவர்கள் தேவதைகளுக்கு சமம். இது போலவே இன்று நம் வேலையாட்களாக இருப்பவர்கள் ஒரு காலத்தில் தேவதைகளாக இருந்திருக்கிறார்கள். நாம் தான் அவர்களை வேலைக் காரர்களாக்கி வைத்திருக்கிறோம் என்று புரிந்து கொள்ளலாம் தானே. 

நம் வாழ்க்கைக்கு எது தேவை அதை எப்படி அடைவது என்று நாம் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். அப்படி நினைத்ததை அடைய விடாத முயற்சி செய்வதோடு நமது திறமையை வளர்த்துக் கொண்டே வந்தால் வானத்திலிருந்து தேவதை வந்து உதவி செய்யாவிட்டாலும் கூட நாமே எதையும் சாதித்துவிட முடியும்…

Leave a Comment